Sunday, March 10, 2013

மலையின் மேலொரு பட்டணம்

மலையின் மேலொரு பட்டணம்
மலையின் மேலொரு பட்டணம்
மூங்கில் வனம் அழித்து
காட்டு மரம் வெட்டி
மேடு பள்ளம் நிரவி

மேகப் போர்வை போர்த்திய
சலவைக் கல் மாளிகை எழுப்பி

வெயில் தாங்காத வெள்ளையருக்கு
கைகட்டிச் சேவகம் செய்யவும்
துரைசானி மாருக்குப் பல்லைக்காட்டி
பணிவிடைகள் புரியவும்
ஐயாக்கள்மார் எழுப்பிய நகரம்
இன்று சுதேசிச் சீமான்கள்
கூறுபோட்டு விற்றுவிட்டு
கறுப்புப் பணமாக்கிக்  


வழிபாடு இல்லாத வாழ்க்கை

வழிபாடு இல்லாத வாழ்க்கை எது?
வழிபாடு இல்லாத வாழ்க்கை இல்லை;
கடவுளோ, கருத்தோ ,கோட்பாடோ,
எல்லா மடமைக்கும் எதிர்நிலை என்று
போர்க்குரல் எழுப்பும்  மடமையோ ;
பாசமோ, நேசமோ,காதலோ, காமமோ,
எல்லா மதிப்பீடும் கைகட்டி நிற்கும்
மஹா சன்னிதானமான மஞ்சள் உலோகமோ
பொழுது விடிந்து பொழுது போனால்
ஏதேனும் ஒன்றைப் பற்றிப் பிடித்து
வழிபடப் பிறந்த மனிதன்
பரிதாப ஜீவன் தான்
ஒரு நிம்மதி; பரிபக்குவம் வந்ததும்
விடுபடும் எல்லா வழிபாடும் !

கண்டு முடித்துவிடு காணவிரும்பும் கனவுகளை


கண்டு முடித்துவிடு காணவிரும்பும் கனவுகளை 

நேற்றை நோக்கிப்
பாய்ந்தோடுகிறது இன்று
நொடியையும் நிமிடத்தையும்
உதறி உதறி எறிந்தபடி
விக்கிரமாதித்தியனை
விரட்டிக்கொண்டு
சாலிவாஹனன் சவாரி
வருவது போல்
நாளை துரத்தி வருகிறது பின்னால்
காலக்குதிரையின்
காலடிக் குளம்போசை
கொண்டுவரும் செய்தியோடு .
இருப்பதற்குள் மீண்டும்
மறுகணம் ஒன்று உதிப்பதற்குள்
கண்டு முடித்துவிடு
காணவிரும்பும் கனவுகளை
பிறகு மறந்துபோகும்
வருவது எது?
போவது எது?
இருப்பதும் பிறப்பதும்
இறப்பதும் யார் யார்?

மிதிபட்டுப் பதிந்த காலடித்தடங்கள்

மிதிபட்டுப்  பதிந்த காலடித்தடங்கள் 
மிதிபட்டுப் பதிந்திருக்கும்
காலடித் தடங்களில்
எது அவளுடையது?
எது அவனுடையது?
கரைமணல் வெளியில்
குறிப்பேதும் இல்லை.
அலை பாய்ந்துவந்து
அழிக்கிற வரையில்
அதுவா இதுவாவெனக்
காதல் இதயம்
பதைபதைக்கிறது.
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றென
மதி மயங்குகையில்
அத்தனையும் ஒருமித்து
ஆதிபாதம் அத்தன் பாதமாகி
இது உன்னுடையது
அது என்னுடையதென
அவளும் அவனும்
ஒன்றித்து நிற்கையில்
அலை ஆயத்தமாகிறது
அடுத்த அரங்கவேளைக்கு.

நாடும் மாறும் நாளையும் மாறும்

நாடும் மாறும் நாளையும் மாறும்
உலகின் எங்கோ ஒரு மூலையில்
ஏதோ ஒரு நூலகத்திலோ
வாசிப்பு மேஜையிலோ
யாரோ ஒரு வாசகர்
வாசிக்கிறார் என் படைப்பை
இந்த வேளை இந்த நிமிடம்..

ஏதோ ஓர் ஏடு புரள்கிறது;
நாளை மாறும் நாடு என்ற
என் நம்பிக்கையின் உழவு
நடத்தி முடித்த என் பேனா
சொல் வயல் விளைவித்த
பக்கங்களைக் கண்டு
மூடியை மாட்டுகிறது தற்காலிகமாக.

நாடும் மாறும் நாளையும் மாறும்
நான் எதிர்பார்த்தபடி அல்லது எதிர்பாராதபடி
மாறவேண்டும் என்ற என் நம்பிக்கை
மட்டும் மாறவே  மாறாது.