Saturday, January 26, 2013

கூழுக்கும் கஞ்சிக்கும்

கூழுக்கும் கஞ்சிக்கும் 
கூழுக்கும் கஞ்சிக்கும்
கவிதை விற்று
நெஞ்சு நலிந்தது
தமிழ்ப்படைப்பு
இல்லாத கடவுளை
இருப்பதாய்க்கணக்கெழுதி
எண்ணிக்கை வளர்த்து 
கண்மூக்கு ஆயுதம் வாகனம்
கொடுத்துக்  கையிலே
ஜால்ராவொடும் தாளத்தோடும்
பக்திக் கிறுக்கில்
கோட்டை விட்டது நாட்டை

மையலுக்கும் உதட்டுக்கும்
முலைகளுக்கும் முயக்கத்திற்கும்
பண்டமாற்றம் செய்யமுனைந்து
பித்துப் பிடித்துப் பைத்தியமாகி
பரிகாசமே மீதி.தற்போது
குண்டும் பீரங்கியும்
கொலைவாளும் தீவட்டியும்
கோருகின்றன கைமாற்றம்

நீதி சொல்லிச் சொல்லி
நைந்தே போயிற்று பழஞ்சுவடி 

கடவுளாவது, காதல் கிளிகளின்
கொஞ்சுமொழிக்  கவிதையாவது !

கஞ்சிக்கும் கூழுக்கும்
வழியற்றோர் மன உலையில்

எரிகிறது தீ அடுப்பு  

கவனம் ஈர்க்கும் கற்பூர ஜோதி

கவனம் ஈர்க்கும் கற்பூர ஜோதி 
மறதியின் மகாநதியில் வீசும்
எல்லா ஞாபக  வலையி லும் சிக்கிவிடுவதில்லை
சகுந்தலை தொலைத்த மோதிரம்
விழுங்கிய மீன்

காதல் கைநழுவிவிடுகிறது
காதலியின் சோக  ரகசியம் போல
சிங்கங்கள் காத்திருக்கின்றன
தந்தையில்லாது வளரும்
மைந்தரின் கைகவ்வ.

வரலாறு காத்திருக்கிறது
தேசத்தின்  ஒரு பெயருக்காக
பேரவை காத்திருக்கிறது
துஷ்யந்தர்களின் மனச்சாட்சிக்கு
மீனவன் சான்று போல

நாம் காத்திருக்கிறோம்
நம்மைப் படைத்த கடவுளின்
கவனம் ஈர்க்கக் கரையும் 
கற்பூரமாக