Saturday, July 28, 2012

அடிப்படைத்தேவைகளின் பட்டியல்

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து) 
காதலுக்காகவே  காதலிப்பவர் 

கவிதை ஒரு மோசமான காதலி
பருகிக்கொண்டே இருப்பாள்
உயிரைச் சிறிது சிறிதாக
அனுபவித்துப் பார்த்தால் ஒழியப்
புலப்படாத உண்மை அது
அசந்தர்ப்பமான வேளைகளில்
அவள் செய்யும் சிருங்காரம்
ஊடல் முறுக்கு மோடி
கைவிட்டு விட்டாயே என்ற்
கைகேயி சாகசம்
கெஞ்சிக் கரைந்துருகி
மன்றாடி மண்டியிட்டால்
புறக்கணிக்கும் மனச்செருக்கு 
பாரதியே புலம்பிவிட்டார் 
'எங்ங் னம்  சென்றிருந்தீர்?' என்று.   


குடும்பம் இருந்துவிட்டால் 
குடைச்சல் கூடிவிடும் 
அக்கம்பக்கம் உறவு 
நட்புச் சூழல் 
அனைவருமே மண்டகப்படி 
வயிற்றெரிச்சல்
காண்பதே கழுத்தறுப்பு

'வருகிறது பார் ஒரு சொரணை
கேட்ட ஜென்மம்
காற்றை விற்று
நீரை விற்று
தெருப்புழுதி எருவை விற்று
தினந்தோறும் விற்கிறார்கள்
காகிதக் குப்பை
தெரிகிறதா பித்துக்குளிக்கு !
உள்ளூர வெளிப்படையாய் 
இதுதான் லட்சார்ச்சனை கவிஞனுக்கு 


எது உறைக்கப்போகிறது 
காதல் நாயகியின் 
மோகமயக்கத்தில் 
கட்டுண்டு கிடப்பவனுக்கு?


அவ்வப்போது இதோபதேசத்திற்கும் 
அனுதாப ஆரத்திக்கும் 
பஞ்சமில்லை 
'அடிப்படைத்தேவைகளின்
பட்டியலில் வாராத பொருள் மீது
ஆசை வைத்து
என்ன சாமி புண்ணியம்?'
ஞானமும் வருகிறது 
கவிஞனுக்கும் அவ்வப்போது 


காதலியின் கண்மயக்கும் 
கனியூறும் சொல்மயக்கும் 
தந்துவிடும்மறுமயக்கம் 
காதலி மோசமானால் என்ன?
காதல் மோசமவதில்லை 
இது தான் காதலுக்காகவே 
காதலிப்பவர் கணிப்பீடு 
வையவன் 

காதலின் ஸ்வரஸ்தானங்கள்

கண்ணீரின் படிக்கட்டுகள் 
இலையுதிர் காலத்தில்
முடியிழந்து முக்காடில்லாத
கிழட்டு விதவையாகி
வசந்தம் வந்ததும்
பருவக்குமரி போல்
குலுங்கிப்பகட்டும் காடுகள்
இதோ அருகில் அருகிலே தான்
காற்று உதிர்த்ததால் ஓலமிட்டு
ஓடிய இலைகளை எண்ணி
மழை சிந்திய கண்ணீர்த்துளிகளை
நினைத்து கிளைகள்
சலசலத்துச் சிரிக்கின்றன
கண்ணீரைப் படிக்கட்டாக்கி
கால் முளைத்து வந்த
இலைகள் கைதட்டுகின்றன.
ஏழையின் ஆயுதமும்
இறைவனின் சிரிப்பும்
கண்ணீரின் படிக்கட்டுகளில்
ஏற்றி ஏற்றி விட்டால் தான் 
விமோசனம் கிடைக்கிறது
காதலின் ஸ்வரஸ்தானங்கள் கூட
அங்கே மிதித்துத்தான்
எங்கோ செல்கின்றன
வையவன் 

நீரோடு காற்று நிகழ்த்தும் காதல்

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து) 

நீர்க்குமிழிகள் 

குதூகலத்தோடு தான் 
நீர்க்குமிழிகள் மகாவிஷ்ணுவோடு 
போட்டி போடுகின்றன 
அவதாரக் கணக்கு விவகாரத்தில்.
தீமை தோன்றினால் போதுமென 
அவர் மாதிரியே  
காற்று தீண்டினால் போதும் 
சோப்புக் குமிழி சோற்றுலைக் குமிழி 
பொங்கிச் சிரிக்கும் பால் குமிழி 
பல் தேய்த்து வாஷ்பேசினில் 
கொப்புளித்து உமிழ்ந்த குமிழி 
பப்பிள்ஸ் என்ற பெயரில் 
விற்கப்பட்டு பிளாஸ்டிக் குச்சி வழியே 
குழந்தைகளின் ஊது நுணுக்கக் கோணத்தில் 
மிதந்துபோய்ச் சிதறும் பலூன் குமிழி 
கடையில் எண்ணெய் கொதித்ததும் 
கண்விழித்தெழும் கணக்கழிந்த குமிழி 
அலைநுரைகளில் துயிலும் ஆனந்தக்குமிழி 
நீள்கிறது  நீரோடு காற்று 
நிகழ்த்தும் காதல் விளையாட்டு 
தொட்டுப் பிடித்தால் 
விட்டுப் பறப்போமென 
நீர்க்குமிழி காட்டும் 
எழிற்கோலம் மகாவிஷ்ணு மாதிரியே 
நெஞ்சில் சில்லிட்டுச்  செல்கிறது 



வையவன்