Saturday, July 28, 2012

அடிப்படைத்தேவைகளின் பட்டியல்

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து) 
காதலுக்காகவே  காதலிப்பவர் 

கவிதை ஒரு மோசமான காதலி
பருகிக்கொண்டே இருப்பாள்
உயிரைச் சிறிது சிறிதாக
அனுபவித்துப் பார்த்தால் ஒழியப்
புலப்படாத உண்மை அது
அசந்தர்ப்பமான வேளைகளில்
அவள் செய்யும் சிருங்காரம்
ஊடல் முறுக்கு மோடி
கைவிட்டு விட்டாயே என்ற்
கைகேயி சாகசம்
கெஞ்சிக் கரைந்துருகி
மன்றாடி மண்டியிட்டால்
புறக்கணிக்கும் மனச்செருக்கு 
பாரதியே புலம்பிவிட்டார் 
'எங்ங் னம்  சென்றிருந்தீர்?' என்று.   


குடும்பம் இருந்துவிட்டால் 
குடைச்சல் கூடிவிடும் 
அக்கம்பக்கம் உறவு 
நட்புச் சூழல் 
அனைவருமே மண்டகப்படி 
வயிற்றெரிச்சல்
காண்பதே கழுத்தறுப்பு

'வருகிறது பார் ஒரு சொரணை
கேட்ட ஜென்மம்
காற்றை விற்று
நீரை விற்று
தெருப்புழுதி எருவை விற்று
தினந்தோறும் விற்கிறார்கள்
காகிதக் குப்பை
தெரிகிறதா பித்துக்குளிக்கு !
உள்ளூர வெளிப்படையாய் 
இதுதான் லட்சார்ச்சனை கவிஞனுக்கு 


எது உறைக்கப்போகிறது 
காதல் நாயகியின் 
மோகமயக்கத்தில் 
கட்டுண்டு கிடப்பவனுக்கு?


அவ்வப்போது இதோபதேசத்திற்கும் 
அனுதாப ஆரத்திக்கும் 
பஞ்சமில்லை 
'அடிப்படைத்தேவைகளின்
பட்டியலில் வாராத பொருள் மீது
ஆசை வைத்து
என்ன சாமி புண்ணியம்?'
ஞானமும் வருகிறது 
கவிஞனுக்கும் அவ்வப்போது 


காதலியின் கண்மயக்கும் 
கனியூறும் சொல்மயக்கும் 
தந்துவிடும்மறுமயக்கம் 
காதலி மோசமானால் என்ன?
காதல் மோசமவதில்லை 
இது தான் காதலுக்காகவே 
காதலிப்பவர் கணிப்பீடு 
வையவன் 

No comments: