Sunday, July 29, 2012

எட்டிப் பார்க்கும் சுட்டிக் குழந்தை

அம்மா எங்களைக் காணவருவாள் 
அம்மா எங்களைக்  காண வரும்போதேல்லாம்
நாங்கள்  பர்ஸ்ட் லைன்
பீச்சுக்குப் போவோம் 
அப்போது மெரீனா தான் 
செகண்ட் லைன் பீச் 
பால்வெள்ளை மணலை இழந்து
இப்போது சிதிலமாகிவிட்ட 
சென்னைக் கடற்கரையில் நின்று 
வங்காள விரிகுடாவை 
அம்மா வெகுநேரம் வெறித்துப் பார்ப்பாள் 
உடனிருப்போம் நாங்கள் வாய்பேசாது
அவள் மௌனத்திற்கு மரியாதை தந்தபடி
முக்காடிட்டு மேகம் தரும்
முலைப்பாலைக் குடிக்காமல்
முந்தானை ஒதுக்கி
எட்டிப் பார்க்கும்
சுட்டிக் குழந்தை போல
நிலா தெரிவதைக் கண்டு
பெருமூச்சின்றி அவள் சொல்வாள்
'உங்கள் அப்பா உயிரோடிருந்தால்
பேசித் தீர்க்க எத்தனையோ நினைவுகள் !
நேரமே போதாது '
பிறகு உடனே
மறைந்து விடுவாள்
கனவைக் கலைத்துவிட்டு.
அப்பா  போன் கப்பலை
விழுங்கிய சமுத்திரத்தின் மேல் 
ஓரிரண்டு துண்டுகளாவது  மிதக்குமா?
தேடி முடிப்பதற்குள் 
 கண் விழித்துவிடுவோம் 
அம்மா வரப்போகும்
அடுத்த வேளைக்கு ஏங்கியபடி
வையவன் 

No comments: