Friday, September 23, 2016

எப்போது விடுபாடு வரும் ?

எப்போது விடுபாடு  வரும் ?
அவ்வப்போது
எட்டிப்பார்க்கின்றன
18 மற்றும் 19உடன்
20ம் நூற்றாண்டுகளின்
முற்பகுதிகள்;
என் மனைவியின்
பேச்சினிடையே
கிருத்திகை அமாவாசை
விரதங்களில்,
கண் பூத்துப் போகும்
கார்த்திகைத் தீபங்களில்,
விளக்கு வைத்த
மார்கழி வாசற்படியில்,
வீதியடைத்த
தை பொங்கல்
கோலத்தினிடையே
ஸ்ரீ ராம நவமிக்கும்
ஸ்ரீ கிருஷ்ணஜெயந்திக்கும்
விநாயக சதுர்த்திக்கும்
என் முன், பின் நவீனத்துவங்களைப்
பார்த்துப் பரிகசித்துக்கொண்டு  
புரட்டாசி சனிகளில்
கோவிந்தனுக்குப் படையல் போட்டு
மகா புண்ணியசீலங்களை
காற்றடித்துக் கலைத்துவிடாமல்
கைவைத்துத் தடுத்து ,
இன்றுவரை தனதும்
எனதுமான அடையாளங்களைக்
காப்பாற்றி வருகிறாள்.
வருகின்ற நூற்றாண்டுகள் எதிர்பார்க்கின்றன,
எப்போது விடுபாடு  என்று?
-வையவன்

பௌர்ணமிகள் வீணாகின்றன

பௌர்ணமிகள் வீணாகின்றன
பௌர்ணமிகள் வீணாகின்றன
பால்வெள்ளை ஒளி நதியில்
திளைத்து நீந்தாமல்
எண்ண  இருள் பாலைகளில்
உயிர் தப்ப ஓடும் உலர்வனத்தில்
தட்டுத் தடுமாறித் தவிக்கிறது;
தலை உயர்த்திப்பார்க்காமல்
மயங்கி மருளும் மனித மனம்.
மனம் என்ற ஒன்றை
மயக்காமல் தாலாட்டும்
மகோன்னதம் உலவுகிறது
சிலமணி நேரம் விண்ணிலே
கண்ணுக்குப் படாவிட்டால்
யார் தவறு ?
-வையவன்