Saturday, January 12, 2013

மற்றொரு நெல்மணி

மற்றொரு நெல்மணி 
ஒரு நெல்மணி நின்ற
கதிர் ஈர்க்கில் முளைத்தன
இரு நெல்மணிகள்

ஒரு கதிர் இரு கதிரானதால்
பூரிக்கிறார் பாடுபட்ட
உழவர்
அளக்க வரப்போகும்
கள்ள எடை
நியமன விலை
எடு கூலி
விற்பனை வரி
வாங்கிய கடன்
சுமக்கும் வட்டி
எல்லாமே அடிக்கப்போகும்
கொள்ளையை
மனப்பதராக தூ ற்றித்
தள்ளிவிட்டு
மாறி மாறி
வானையும் மண்ணையும்
பார்த்துப்  பார்த்து
மின்னி எழுகிறது புன்னகை.
வந்த விளைச்சலால்
ஏதோ ஓர் மற்றொரு
வயிற்றிற்கு வழங்கிய
 உத்தரவாதம் 
 பதர் போக்கிய மணியாக
மனசில் நிரம்புகிறது 
 எந்த விலைக்கு
நிகர் அந்தக்
கணநேரக் குதூகலம் ? 



அக்கறைகளுக்கு நன்றி

அக்கறைகளுக்கு நன்றி  
தமிழின்  மீது அக்கறை,  தமிழ்க்கவிதை மீது அக்கறை,நான் கெட்டுச் சீரழிந்து போய்விடக்கூடாதே என்று என் மீதும் சிறிது சிறிது அக்கறை கொண்ட  மஹாத்மாக்கள் பூமியில்  இருப்பதால் தான் அது இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று என் சிற்றறிவுக்குச் சமீபத்தில் தான் எட்டியது. அதாவது தமிழில் என் எட்டாவது கவிதைத் தொகுதியும்  ஆங்கிலத்தில் எட்டுக் கவிதைத் தொகுதியும் எழுதி வெளியிட்ட  பிறகு. .
அடியேன், நாயிற் கடையேன், கவி மகாசமுத்திரத்தில்  ஒரு சின்னக்  கட்டுமரம் கூட  ஓட்டத்தெரியாத கற்றுக்குட்டிக் கவிஞனான சிறியேன், அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் 1967ல் மாலை மயக்கம் என்ற பெயரில் அமுதசுரபியில் முதற் கவிதை எழுதினேன்.அடுத்தடுத்தும்  விட்டுவிட்டும் நான் கவிதை எழுதும் அபசாரத்தைப் பொறுத்தருளி ஆனந்தவிகடன், குமுதம்,கல்கி,தீபம் , தாய் என்று சில பத்திரிக்கைகள் என் கவிதைகளைப் பிரசுரித்து ஆதரித்து வந்தன.வருகின்றன.
'தேதி  குறிக்கப்பட்ட வனம்'என்ற கவிதைத் தொகுதியைப் படித்துவிட்டு முன்னாள் அரசவைக் கவிஞர் .முத்துலிங்கம் அவர்கள் தொலைபேசியில் பாராட்ட, நர்மதா பதிப்பகம் ராமலிங்கம் அவர்கள் தொடர்ந்து  தொலைபேசியில் பாராட்ட, கல்விக்கடல்.பிரேமா நந்தகுமார் அவர்கள் கவிஞர் பட்டமே  கொடுத்து ஒரு கடிதத்தில் பாராட்டியான பின்னர் சில மெய்யன்பர்கள் நான் ஏன் கவிதை எழுதுகிறேன் என்று கவலையால் புழுங்கினர் 
சிறுகதை எழுதியபோது குறுநாவல் நாவல் நாடகம் கட்டுரை வாழ்க்கை வரலாறுகள்,  இலக்கிய விமர்சனம், அறிவியல் நூல்கள் மொழி பெயர்ப்புகள், சிறுவர் நூல்கள்     என்று ஏதேதோ  எழுதியபோது , கண்டு கொண்டதாகவே  காட்டிக்கொள்ளாத, காட்டிக்கொண்டால் தங்கள் கௌரவம் குறைந்து போகும் என்று மெளனமாக இருந்த அந்தப் பெருந்தகைகள், நான் கவிதை எழுதும்போது கொண்ட இக்கவலைக்கு நன்றி.
ஒரு சிறிய நினைவூட்டல்.
சூல் கொண்ட மேகம் மழை பெய்து தான் தீரும்.
அவர்களது அடுத்த விமர்சனம் 'என் கவிதை கவிதையே அல்ல.'
கவிதை அதாவது முதல் கவிதை எழுதப்பட்ட காலம் தொட்டு பாடப்பட்டு வரும் பழைய பல்லவி.அதே பாட்டை சிரமம் பாராது நினைவு கூர்ந்து மீண்டும் பாடுவதற்கு நன்றி.
இது என் கவிதை.
காலத்தோடு நான் விளையாடும் சதுரங்கம்.
வெல்வதோ தோற்பதோ அல்ல விஷயம்.
விளையாட்டு தான் விஷயம்.
விதிகள் என்னுடையவை.ஒரு காலத்தில் புதிய விளையாட்டு புதுக்கவிதை ஆயிற்று.மீண்டும் நினைவூட்டுகிறேன்.
உங்கள் அளவீடுகளுக்கு நன்றி.
உங்கள் அளவீடுகளுக்கு ஏற்ப என் கவிதையை எழுத இயலாமைக்கு வருந்துகிறேன்.நீங்கள் எழுதுங்கள் உங்கள் கவிதைகளை. நான் எழுதிக் கொள்கிறேன் என் கவிதைகளை.அரும்பாடுபட்டு வாங்கியிருக்கிறோமே  எழுத்துச் சுதந்திரம்.
அடுத்த விமர்சனம் 'எழுதுவதற்குச் சுலபமாக இருப்பதால் கவிதை எழுதுகிறேன்'.
நன்றி. என் பதில். எந்த எழுத்தும் சுலபமல்ல. எழுதிப்பார்த்தால் தெரியும்.சுலபமானது விமர்சிப்பது . அது சும்மாயிருப்பதற்கு சௌகர்யமான மாற்று.
அடுத்த விமர்சனம் நான் 'ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதுகிறேன்.'என் பதில் நான் எந்த அயல்மொழிச்சொல்லையும் பயன்படுத்தவே மாட்டேன் என்று தன்னந்தனித் தமிழ் சார்பில் எந்தச் சபதமும் செய்ததில்லை. என்னைச் சுற்றி எட்டு திசைகள்.அது தவிர மேலே ஒன்று. கீழே ஒன்று. எதுவும் என்னைச் சிறைப்படுத்தவில்லை.விண்வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்குள் வந்து விழுந்துகொண்டிருக்கின்றன பன்மொழி ஓசைகள். ஒலிகள். கவசமணிந்து கொண்டு  கவிதை எழுதுவது அசாத்தியம்.
அடுத்த விமர்சனம் 'என் ஒவ்வொரு கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது'.
என் பதில். கதைத்துக்கொண்டே கதைகளுக்குக் கல்தா கொடுக்கும் கலை  நான் அறியாதது நான் எழுதுகிறேன். அவ்வளவே.நான் எழுதுவதால் தமிழின் இருப்புக்கோ பாதுகாப்புக்கோ எந்த பாதிப்பும் வந்து விடாது. வந்தால் தமிழைக் காப்பாற்றுவதற்கென்றே உயிர் முதல் வங்கிக்கணக்கு நீங்கலாக பிற எல்லாவற்றையும் தியாகம் செய்யவென்றே பலர் க்யூவில் நிற்கிறார்கள்.
வாழ்க தமிழ்மொழி .வாழ்க நிரந்தரம். வாழிய வாழியவே!






ஒரு டேபிள் ஸ்பூன் தனிமை

ஒரு டேபிள் ஸ்பூன் தனிமை
அது போதும்  என்னை நான் மீட்டுக்கொள்ள 
எல்லா பிம்பங்களையும்  
எண்ணை தேயத்துக்குளித்துத் 
தலைமுழுகிவிட 
சொன்னார் அந்த 
மிகமிகமிகப் பிரபலம்  
பரிதாபமாயிருந்தது .
ஏன் பிரபலமாக வேண்டும்?
ஏன் புலம்பவேண்டும்?
மாமனிதன் வேஷமா?
மாறுவேடப் போட்டியா?
மொட்டையடித்துப் பரதேசியாக 
சோற்றுக்கு அலைகிற 
சுகம் எப்படி இருக்கும்? 
அலுப்பின் ஆதங்கம் 
உருக்கவே அழைத்துச் 
சென்றேன் ஜவ்வாது 
மலைக்காட்டில் 
மூங்கில் வெட்டும் 
ஆதிவாசி குடிசைக்கு.
இலுப்பெண்ணை வாடை  
எருமைச்சாணம் மெழுகிய 
முற்றத்து மணம் 
திண்ணையில் காய்ந்த 
பன்றியிறைச்சித் துண்டம் 
இருளோடும் கூரைக்குள் 
தலை குனிந்துத தாழ்ந்து 
இறங்கும் குளிர்.
ஙொய் என்று இரையும் 
சிள்வண்டு மௌனம் 
எண்ணறியா தலைமுறையாக 
தனிமையே உறவாகச் 
சிரிக்கும் கண்ணும் பல்லும் 
ஒரே மணி நேரத்தில் 
தப்பித்துக் கிளம்பிவிட்டார் 
தனிமை வேண்டிய தவமணி 
சாகவேண்டியது தான்  
 இனி அவர் சொற்பொழிவைக் 
கேட்க இருப்போர்.
ஆதிவாசி அனுபவிக்கும் 
துன்பம் கேட்டுக் கேட்டுப் 
பொறுக்கமாட்டாமல் 
ஆழ்கடல் மீன் போல் 
ஆதிவாசியின் தனிமைச் சுகம் 
அவனே அறிவான்.















 

காப்பிரைட்

காப்பிரைட் 
கடவுளாவதோ கடவுளைக்
கண்டுபிடித்து அந்த டெக்னிக்கை
காப்பிரைட் செய்து 
கட்டணம் வசூல் செய்கிற 
கனவோ  சற்றே 
ஒத்திப்போட்டு உற்றுக்கவனியுங்கள் 
மஞ்சளைச் செய்தது போல 
கறிவேப்பிலையை கைமுதல் 
செய்தது போல 
புறப்பட்டுவிட்டது 
வெள்ளைக்காரக் குருமார் படை.
அசடுகள் போல் சுயப்பெருமை வேண்டாம். 
சிறுதொழிலை உலகமயமாக்கியது 
போதாமல் அழியாத்தொழிலான 
கடவுள் கண்டுபிடிக்கும் தொழில் 
அவர்கள் கைக்குப்போய்விட்டால்  
அப்புறம் நீங்கள் லாட்டரி அடிப்பீர்கள்;
எச்சரிக்கை! இப்போதே 
கடவுள் கண்டுபிடிக்கும் தொழிலைக் 
 காப்பிரைட் செய்வது நல்லது  
 

யோகா

யோகா 
ஏதாவது ஒரு வகையில்
எப்படியோ ஒரு வழியில்
தவணை முறையிலோ
ஒரே பேமெண்டிலோ 
கூட்டம் கூடியோ 
அல்லது தனியாகயோ  
எந்தக்கட்டணமாவது
செலுத்திவிட்டு நீங்கள்
யோகா கற்காவிட்டால்
நவீன மனிதரே இல்லை
அவுட் ஆப் டேட் .
பதஞ்சலி பட்ட பாட்டிற்கு
பிரயோசனமே இல்லை.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகி
அமெரிக்கா ஐரோப்பா முழுவதும் 
குடிசைத்தொழிலாகவும்
கார்பொரேட் செக்டாராவாகவும்
வெட்டியாகவா நடக்கிறது விவகாரம்?
மகாமனித மந்தை ஒன்று
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
எந்த யோகாவுமின்றி
சரக்கு மாஸ்டர் அன்றாடம்
போடும் பஜ்ஜி போண்டா போலவே
அன்றாடத் தேவைக்காக
உயிர் வாழ்ந்து நீப்பது
பரிதாபமல்லவா?
நீங்களும் வல்லவராகி
நாலோடு  நாராயணனாகி
நெஞ்சு நிமிர்த்தவேண்டாமா?
பாட்டாளி ,விவசாயி
தொழிலாளி, பஸ் டிரைவர் கண்டக்டர்
எந்த யோகாவுமின்றி
எப்படியோ ஜீவித்தால் உமக்கென்ன?
அது அவர்கள் தலையெழுத்து.