Monday, July 23, 2012

விடுதலை விரும்பி

(தேதி குறிக்கப்பட்ட வனம் - கவிதைத்தொகுதியில் இருந்து  ) 

விடுதலை விரும்பி 

குயிலே 
உனக்கனந்த கோடி 
நமஸ்காரம் 
குமரன் வரக் கூவுவாய் 
என்றொரு பழைய பாட்டு 

முருகன் தந்த 
முத்தச் சுவையின் 
எச்சக் கிறுகிறுப்பில் 
எந்த வள்ளியோ 
இன்னும் வெதும்புகிறாள் 

நானும்  தத்தளிக்கிறேன் 
எவள் எவளோ 
அப்போதைக் கப்போது 
நான் ஆணென்று நினைவூட்டி 
என்னை அலைக்கழிக்கும் 
மனக் கிறுக்கில் 

குமரா குமரா வந்துவிடு 
குயிலே குயிலே   கூவிவிடு 
எனக்கும் விடுதலை தந்துவிடு 
வையவன் 

தாய்ப் பால்

(தேதி குறிக்கப்பட்ட வனம் - கவிதைத்தொகுதியில் இருந்து  )

தாய்ப் பால் 

வேலைக்குப் போகும் 
இளந்தாய்  போல் 
வலி பொறுக்காது 
அக்கம் பக்கம்
பார்த்துக்கொண்டு 

பிசைந்து தான் 
வெளியேற்ற நேர்கிறது 
கவிதானுபவத்தின் 
முலைக் காம்பில் 
விம்மிக் கசிந்து துளிர்க்கும் 
உயிர் ஊற்றை 

சிசு ஓரிடம் 
வலி வேறிடம் 
கவி ஓரிடம் 
செவி வேறிடம் 
அருந்தாக் குறையும் 
கேளாக் குறையுமாக 
இடைவெளிகள் விரிந்துவிட்டன
சுரப்பு நிற்கவில்லை 
ஏதோ ஒரு வாய் திறக்கும் 
அந்த நம்பிக்கையில் கசிகிறது 
தாய்ப்பால் 

வையவன்