Saturday, January 26, 2013

கவனம் ஈர்க்கும் கற்பூர ஜோதி

கவனம் ஈர்க்கும் கற்பூர ஜோதி 
மறதியின் மகாநதியில் வீசும்
எல்லா ஞாபக  வலையி லும் சிக்கிவிடுவதில்லை
சகுந்தலை தொலைத்த மோதிரம்
விழுங்கிய மீன்

காதல் கைநழுவிவிடுகிறது
காதலியின் சோக  ரகசியம் போல
சிங்கங்கள் காத்திருக்கின்றன
தந்தையில்லாது வளரும்
மைந்தரின் கைகவ்வ.

வரலாறு காத்திருக்கிறது
தேசத்தின்  ஒரு பெயருக்காக
பேரவை காத்திருக்கிறது
துஷ்யந்தர்களின் மனச்சாட்சிக்கு
மீனவன் சான்று போல

நாம் காத்திருக்கிறோம்
நம்மைப் படைத்த கடவுளின்
கவனம் ஈர்க்கக் கரையும் 
கற்பூரமாக

No comments: