காதல் செய்யவே காதலிப்பவர்
கவிதை ஒரு மோசமான காதலி
அறிந்தார் அறிவர்
அனுபவித்தவர் அறிவார்
காதலியின் தொல்லையை
அசந்தர்ப்பமான வேளையிலும்
அவள் செய்யும் சிருங்காரம்,
ஊடல் மோடி
கைவிட்டு விட்டாயே
என்ற குற்றச்சாட்டு!
கெஞ்சிக் கரைந்துருகி
மண்டியிட்டுப் பிச்சை கேட்டுப்
பாடுபட்ட நேரமெல்லாம்
புறக்கணித்த மனச்செருக்கு.
பாரதியே புலம்புகிறார்
‘எங்ஙனம் சென்றிருந்தீர்’ என்று
அப்படி ஓர் ஆளுமை முறுக்கு.
குடும்பம் இருந்துவிட்டால்
குடைச்சல் கூடுதல்
சுற்றுப்புறம், உறவு
நட்புச் சூழல்
எல்லோருக்கும்
மண்டையிடி
வயிற்றெரிச்சல்
கழுத்தறுப்பு
‘போகிறது பார் ஒரு
சொரணை கெட்ட
ஜென்மம்!
கவிதை எழுதுகிறானாம் கவிதை..
‘காற்றை விற்று நீரை விற்று
தெருப் புழுதி எருவை விற்று
தினந்தோறும் விற்கிறார்கள்
காகிதக் குப்பை!
இதுவெல்லாம் கவிதையாம்!
இவனெல்லாம் கவிஞனாம்.
விற்கத் தெரிகிறதா பித்துக்குளிக்கு?’
பொதுவாக இதுதான்
வரவேற்பு கவிஞனுக்கு
ஆசை நாயகியின்
மோக மயக்கத்தில்
கட்டுண்ட அடிமைக்கு
எது உறைக்கப்
போகிறது?
No comments:
Post a Comment