Wednesday, July 25, 2012

மனிதனைத்தேடுகிற மணியோசை

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)
அழைக்கிறது மணியோசை 
வரவிருக்கிற அடுத்த ரயில்
அடுத்த பூஜைவேளை
அடுத்த கல்வியாண்டு
ஆரம்பமாகிற முதல் நாள்
அருகில் ஒரு சிறைச்சாலையில்
ரோல் காலுக்கு அழைக்கும் மிடுக்கு
சற்றுத்தள்ளி  ஒரு மாணவர் விடுதியில்
உணவருந்த வரச்சொல்லி ஓர் உத்தரவு
'ஐஸ்வண்டி மணியடித்தால்
நான் வந்து நிற்பேன்' என்று
அவள் சொன்ன வாக்கு
என்னென்ன நினைவூட்டி
எங்கெல்லாம் அழைக்கிறது
இந்த மணியோசை?
கிரெம்ளின் மணியோசை
ஏனோ நினைவு வருகிறது
விழுந்து உடையும் முன்பும்
விழாமல் ஒலித்தபோதும் 
எப்படி ஓசையிட்டிருக்கும் அது?
எந்த மணியோசையும் 
நாதத்தின் ரதயாத்திரையாகி 
ஓங்காரத்தைத் தேடுகிறதா?
காதலி மறுத்துவிட்டு வளர்த்தாள் 
'அது மனிதனைத்தேடுகிறது'
உவமை பழையது 
ஆனால் கேட்க  இதமாயிருந்தது.
வையவன் 

No comments: