Wednesday, July 25, 2012

ஒரு தகன வேளை

(தேதி குறிக்கப்பட்ட வனம் கவிதைத் தொகுதியிலிருந்து)
ஒரு தகன வேளை 
சவமானவர் காத்திருந்தார்
சடங்கு முடிய
'பார்க்க வேண்டியவங்க
எல்லாம் பாத்தாச்சா?'
கேட்டான் வெட்டியான்
கடைசி வறட்டியை மூடும் முன்
'நீ நிஜமா?'
வெட்டி வீசி எழுந்த மின்னல்
கேட்டது சுடுகாட்டு மின்மினியிடம்
'நான் இன்னும்
தயாராகவில்லை'
முணுமுணுத்தது
காற்றில் படபடத்த தீக்குச்சி
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
ஈர விறகுகளை நோக்கி.
'கொஞ்சம் சும்மா இரு'
ஆட்சேபித்தது புவியீர்ப்பு விசை
அடிக்கிற காற்றைப் பார்த்து.
விறகுக்கட்டைகள் எரிந்தபின்
சிதறும் கரித்துணுக்குகள்
தரை இறங்கவேண்டுமே
என்ற அக்கறையில்
'அடுத்த தேர்தலுக்குள்ளே
மின்மயானம் அமைச்சுத்துத்
தர்ற கட்சிக்குத்தான் நம்ம ஓட்டு'
என்றான் அரசியல் புதுமுகம்
இடி சிரித்தது வடக்கே
சவமானவர் காத்திருந்தார்
எல்லாச் சவங்களையும்
போலத் தகனமாவதற்கு
வையவன்  

No comments: