Monday, January 28, 2013

ஒரு தோண்டல் ஒரு ஊதல்


ஒரு தோண்டல் ஒரு ஊதல்
ஒரு தோண்டல் ஒரு ஊதல்
பொடி வைத்து ஊதுகிறார்
பொற்கொல்லர்
பாணடியனின் மதுரையோடு
அவர் கெட்டபெயர் போயிற்று

பூமியின் கருவறை குடைந்து
குனிந்து வளைந்து புழுவாய் ஊர்ந்து
எப்போதும் இரவான
இருட்டுக்குள்ளே
தலை விளக்கு மாட்டி

பாறை இடிந்து தலை நொறுங்கும்
அபாயத்தைக் கூடக்
குடிக்கின்ற கஞ்சிக்கு
விற்றுவிட்டுத்தோண்டுகிறான் தொழிலாளி
பதுங்கியிருக்கும் தங்கத்தை.
ஒருபோதும் தீராது
பொன் மயக்கம்

மூசையிலே வேகவிட்டு
உருக்கி வார்த்து
தட்டி நீட்டிக் கம்பியாக்கிக்
தன கண்ணொளியைத் தானம் செய்து 
பொன்மேனி மினுக்குகிறார் பொற்கொல்லர்

காய்கறிக் கடையில் கூட
அந்தக்  கூட்டமில்லை
இறைச்சி மீன் கடையில்
ஏதோ சற்று சுமார்
நகைக்கடையில் பெரு நெரிசல்

கடையின் படியெதிரில்
இரு சக்கரம் முச்சக்கரம்
நாற்சக்கரம் என்று
வண்டிமேல் வண்டி நிற்கத்
திணறும் வாடிக்கையாளர்.
தோண்டிக் கொண்டே இருக்கிறான் தொழிலாளி
ஊதிக் கொண்டே இருக்கிறார் பொற்கொல்லர்

பூமி சுற்றத் தொடங்கியதிலே
இருந்து  உயர்ந்துகொண்டே போகும்
விலையைப் பாராமல்
வேலை வாங்கிக்கொண்டே
சுழல்கிறது பொன்மயக்கம்.

No comments: