Monday, January 28, 2013

இஸபெல்லாக்களும் நூருன்னிஸாக்களும்

இஸபெல்லாக்களும் நூருன்னிஸாக்களும் 
இஸபெல்லாக்களும் நூருன்னிஸாக்களும்
உலவிய நெடுஞ்சாலை
வெறிச்சிட்டுவிட்டது.
நிலவிய நிலாவெளிச்சம்
குடிபெயர்ந்து விட்டது
விமானம் ஏறி,
வயிற்றுப்பிழைப்பைத் தேடி
கண்கள் தேடி அலைகின்றன
பாலைவனப் பாழ்மணலில்
எங்காவது அவர்களின்
இனிய நிழல் படர்ந்தால்
கையொத்திக் கும்பிட்டு
நெஞ்சுக்குள் முத்தம்சொரிந்து
வழிபாடு செய்ய.
மையெழுதி,உதட்டைச்
சிவக்கவைத்து மூக்குத்திப்
பொன்மின்னச சிரித்த
சிரிப்புகளை பாலைவனத் தாகம்
விலைக்கு வாங்கிக்கொண்டது.
என்னென்னவோ விலைபோய்
எங்கெங்கோ தொலைந்துவிட்டன.
இஸபெல்லாக்களும் நூருன்னிஸாக்களும் மட்டும்
இழப்பீடுகள் போல் இரவு வந்ததும்
மின்னுகிறார்கள் நட்சத்திர மனவெளியில் .

No comments: