Tuesday, April 17, 2012

ஒரு பெண் பிறந்தாள்

பிறந்தாள் ஒரு பெண்
அடுத்தடுத்து ஐந்தாறு பெண்கள்
பிறந்த பண்ணை வீட்டின்
நடைவழியில் அந்தியிருள்
சூழ்ந்த அரைக் கருநிழலில்
கூடியிருந்த கும்பல் விலக்கிப்
பேறு பார்க்கச்சென்ற மாது 
நிசி கழிந்து முகம் தொங்கி
திரும்பி வரக் கண்டு
கூட்டத்தில் நிசப்தம்.
அடுத்து அழுகுரல். பின் ஓர் ஓலம் 
மீண்டும் பிறந்தது ஒரு பெண் குழந்தை
பெண்ணுரிமை பெண் சமத்துவம்
பேசலாம் வீரமாய்
பிறந்ததும் திறக்கின்றன
அடைத்து மூட முடியாத
கவலையின் கதவுகள்
கறந்து காட்டியது காராம்பசு
இருந்தாலும் அன்று கடவுளுக்கு
கண் ஆஸ்பத்திரிக்கு வழி காட்டி
எல்லாப் பெண்களும்
வாயாரச் சபித்தார்கள்
வேறென்ன செய்வார்கள்?
எந்த இதிகாசம் அவர்கள்
வென்றதை நிரூபித்திருக்கிறது?
வையவன்

No comments: